Friday 13 September 2013

தகவல் திருட்டு: ஜிமெயில், யாகூவை பயன்படுத்த மத்திய அரசு தடை

ஜிமெயில், யாகூ போன்ற தனியார் இணையதள சேவைகளை பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்துள்ளது. 
தனியார் இணையத் தள சேவைகளை பயன்படுத்தி அனுப்பப்படும் அரசு தகவல்கள் மர்ம நபர்களால் திருடப்படுவதாக தெரிய வந்தது. மேலும் சில இ-மெயில் தகவல்களை சில நாடுகள் கடத்தி பிறகு முடக்கி விடுவதும் கண்டு பிடிக்கப்பட்டது. மத்திய-மாநில அரசு ஊழியர்கள், அரசு தொடர்பான தகவல்களை இ- மெயில் மூலம் அனுப்பி வருகிறார்கள். இதற்காக அவர்கள் ஜிமெயில், யாகூ போன்ற தனியார் இணையத்தள சேவைகளை பயன்படுத்தி வருகிறார்கள். அரசு அதிகாரிகள் அனுப்பும் தகவல்களை அமெரிக்க உளவுத்துறை பார்ப்பதாக சமீபத்தில் தெரிய வந்தது. இதையடுத்து மத்திய-மாநில அரசு அதிகாரிகள் ஜிமெயில், யாகூ இணையத் தளங்கள் மூலம் தகவல்களை பரிமாறிக் கொள்ள மத்திய அரசு தடை விதிக்க முடிவு செய்துள்ளது. 
இ.மெயில் கொள்கை
இதற்கிடையே மத்திய அரசு இன்னும் 2 மாதங்களில் இ.மெயில் கொள்கையை வரையறுக்க திட்டமிடப்பட்டுள்ளது. தனியார் இணையத்தளங்களை பயன்படுத்துவதற்கு பதில் பிரத்யேக அரசு இணைய தளம் உருவாக்க ஏற்பாடு நடந்து வருகிறது. இதனையடுத்து மத்திய- மாநில அரசு அதிகாரிகள் சுமார் 6 லட்சம் பேர் அரசு இணையத்தளம் மூலம் தகவல் பரிமாற்றம் செய்வார்கள். இதன் மூலம் அரசின் முக்கிய தகவல்களின் ரகசியத்தை பாதுகாக்க முடியும் என்று கருதுகிறார்கள்.